நற்குணங்களை வளர்த்துக் கொள்ளும் செயல்முறை

குணங்களை வளர்த்துக் கொள்ளும் செயல்முறையில் நான்கு நிலைகள் உள்ளன.

நிலை 1.    செயல்முறைக்காக குணங்களை தேர்ந்தெடுத்தல்

இந்த செயல்முறைக்காக இரண்டு அல்லது மூன்று குணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த செயல்முறைக்கு ஒரு குறிப்பிட்ட குணத்தை தேர்ந்தெடுக்க தேவையான அடிப்படைத்  தகுதி : ஆதர்ச ஆளுமையை தன்னுள் கொண்டு வர கீழே கொடுக்கப்பட்ட விஷயங்களை மனதில் இருத்தி குணங்களை வளர்த்துக் கொள்ளும் லக்ஷியத்தை உறுதி செய்ய வேண்டும்.

அ.    சமுதாய நலன் : தன்னுடன் தொடர்பு கொண்ட சமூகத்திற்கு நன்மை பயக்கும் குணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கான உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவர் ஆசிரியராக இருக்கும் பட்சத்தில் தன்னிடம் இல்லாத மற்றும் தான் கற்பிக்கும் துறைக்கு பயன் தரக்கூடிய குணங்களான திட்டமிடுதல் (பரீட்சைக்கு முன் பாடத்திட்டத்தை முடிப்பது), சகிப்புத்தன்மை, குணங்களை வளர்த்துக் கொள்ளுதல், பிறரை ஊக்குவித்தல், அன்பு போன்ற குணங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஆ.   ஒருவரிடம் உள்ள குணங்கள் மற்றும் ஆளுமை குறைகளின் விகிதாசாரம் : ஒருவர் தன்னிடமுள்ள குண-குறைகளைக் கருத்தில் கொண்டு குணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குணங்களை வளர்த்துக் கொள்ளும் செயல்முறைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குணம், ஒரு தீவிர ஆளுமை  குறையை நீக்க உகந்ததாக இருக்க வேண்டும். உதாரணமாக,  ஆளுமை குறைகளை நீக்குவதில் அகந்தை என்ற ஆளுமை குறை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், குணங்களை வளர்க்கும்  செயல்முறையில் பணிவு என்ற குணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இ.    தனிமனிதனின் வாழ்வில் உள்ள பிரச்சனைகளின் தன்மை : ஒரு தனிமனிதனின் உடல், மனம், புத்தி, குடும்பம், கல்வி, அலுவலகம்  அல்லது நிதி பிரச்சனையில் எது தீவிரமாக உள்ளதோ அதைத் தீர்க்க உதவும் குணத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உதாரணமாக, நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய திறமையுடைய மாணவன் தன்னம்பிக்கை குறைவால் அது முடியாத பட்சத்தில் தன்னம்பிக்கை என்ற குணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஈ.     பணித்துறைக்குத் தேவையான குணங்கள் : பணித்துறையில் அத்தியாவசியமானதும் உதவக்கூடியதுமான குணங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உதாரணமாக, காவல் துறையில் எச்சரிக்கை உணர்வு, நிர்வாகத் துறையில் திட்டமிடுதல் மற்றும் வணிகத் துறையில் பேச்சாற்றல் போன்ற குணங்களைத் தேர்தெடுக்க வேண்டும்.

உ.    ஒருவரின் சிந்திக்கும் திறன் மற்றும் ஆன்மீக நிலை : ஒருவரின் சிந்திக்கும் திறனைப் பற்றி கருதும்போது அவரின் மனம் மற்றும் புத்தியின் அளவையும் கருத்தில் கொள்ள வேண்டும். சிந்திக்கும் திறன் மேம்பட்டதாக இருந்தால், குணங்களின் பல்வேறு அம்சங்களை கற்றுக் கொள்ளும் திறனும் அவற்றை வளர்த்துக் கொள்ளும் செயல்முறையும் இன்னும் திறம்பட நடக்கும். அதன் மூலம் குணங்களை வளர்த்துக் கொள்ளும் செயல்முறைக்கு கதியும் பலனும் அதிகரிக்கும்.

ஒருவரின் ஆன்மீக நிலை அதிகம் இருந்தால், ஆன்மீகம் தொடர்புடைய குணங்களை வளர்த்துக் கொள்வது அதிக பலனை கொடுக்கும். உதாரணமாக, துணிவு, அச்சமின்மை, விடாமுயற்சி மற்றும் வீரம் போன்ற குணங்கள் க்ஷாத்ர உணர்வு என்ற குணத்துடன் தொடர்புடையவை; அடக்கம் மற்றும் பணிவு சரணாகதி என்ற குணத்துடன் தொடர்புடையவை. ஒருவரின் ஆன்மீக நிலை அதிகமாக இருந்தால், ஆன்மீகத்தில் ஆழ்ந்த தாபம் என்ற குணத்தை அவர் கொண்டிருப்பார். இது குணங்களை வளர்க்கும் செயல்முறையில் தொடர்முயற்சி  நடப்பதற்கு உதவுகிறது.

ஊ.   ஒரு குணத்தின் பல்வேறு அம்சங்களில் அத்தியாவசியமான  அம்சம் : ஒவ்வொரு குணமும் பல அம்சங்களை கொண்டுள்ளது. இவற்றில், ஒருவரின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான குணத்தின் அம்சத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ப்ரீதி (ஆன்மீக அன்பு) என்ற குணத்தின் பல்வேறு அம்சங்களை பற்றி சிந்தனை செய்யலாம்.

உதாரணமாக சமூகத்தில் உள்ள ஒருவரிடம் ப்ரீதி என்ற குணம் இல்லையென்றால், குணங்களை வளர்க்கும் செயல்முறையில் அவரின் குறிக்கோள், கீழே விளக்கியுள்ளபடி அவரின் புத்தி மற்றும் ஆன்மீக நிலைக்கு ஏற்ப மாறும். மற்றவர்களிடம் ஒரு புன்னகையுடன் பதில் கூறுதல்; பிறகு, மற்றவர்களைப் பார்த்து நாம் முதலில் புன்னகைத்தல்; மற்றவர் உரையாடும்போது அவருக்கு நேர்மறையான பதிலைத் தருவது; மற்றவர்களிடம் நாமே உரையாடலை ஆரம்பித்து அவர்களைப் பற்றி விசாரித்தல்; மற்றவர்களின் நல்ல செயல்களை பாராட்டி அவர்களை ஊக்குவிப்பது; யாராவது உதவி கேட்டால், ஆரம்பத்தில் நம் சௌகரியப்படி உதவுதல் பிறகு அவர்களின் தேவைக்கு ஏற்ப உடனே உதவுதல்; சுய உந்துதல் மூலம் நண்பர்கள் அல்லது ஒரே மனநிலையில் உள்ளவர்களுக்கு உதவுதல்; கருத்து வேறுபாடு உள்ளவர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப உடனே உதவுதல்; பிறரின் புனித காரியமும் நம்முடையதே என்ற எண்ணத்துடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னிச்சையாக உதவி செய்தல்; இறுதி நிலையில் அறிமுகமற்ற மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களிடமும் எதிர்பார்ப்பில்லாத அன்பு செலுத்துவதோடு அவர்களுக்காக தியாகமும் செய்ய தயாராக இருத்தல்.

நிலை 2.    அன்றாட வாழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட
குணங்களை  பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளை
தேடி பின் முயற்சியின் அளவை தீர்மானித்தல்

அன்றாட வாழ்வின் பல்வேறு செயல்களை ஒரு பட்டியல் இடவும்.  தேர்ந்தெடுக்கப்பட்ட குணத்தை எங்கு செயல்படுத்துவது என்று கண்டுபிடிக்க வேண்டும். பிறகு, கீழே கொடுக்கப்பட்ட பட்டியல்படி முயற்சியின் அளவை தீர்மானிக்க வேண்டும்.

       செயல்முறையில் முயற்சியின் அளவு

செயல் மற்றும் எண்ணத்தின் நிலையில் முயற்சிகள் மேற்கொண்டு குணங்களை வளர்க்கவும்.

அ.  செயல் நிலையில் முயற்சிகள் : இந்த செயல்முறையின் மூன்றாவது நிலையில் இந்த அம்சத்தை பற்றி மேலும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆ.  எண்ணங்களின் நிலையில் முயற்சிகள் : இந்த செயல்முறையின் மூன்றாவது நிலையில் இந்த அம்சத்தை பற்றி மேலும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இ.  ஆன்மீக நிலையில் முயற்சிகள் : எண்ணங்கள் மற்றும் செயல்களின் நிலையிலுள்ள முயற்சிகளை ஆன்மீக நிலை முயற்சியுடன் இணைத்தால் இந்த செயல்முறைக்கு வேகம் கிடைக்கும். இதனை பற்றி மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இறை வழிபாடு தொடர்புடைய செயல்கள் மூலம் தெய்வீக  குணங்களை வளர்த்தல் : ஒரு குறிப்பிட்ட குணத்தை வளர்க்க, நாள் முழுவதும் எந்த செயலுக்கு முன்பும் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவும். செயல் முடிவடைந்த பின்  நன்றியை தெரிவிக்கவும். தெய்வீக குணங்கள் மற்ற குணங்களை போல் சூழ்நிலைக்கேற்ப நல்லது அல்லது தீயது என மாறுபடாது. அவற்றின் மேன்மை எல்லா நேரங்களிலும் செல்லுபடியாகும். பூஜை, புனித நூலை படிப்பது, ஸ்லோகம் சொல்வது, பஜனை பாடுவது, ஆரத்தி செய்வது, மந்திரம் அல்லது நாம-ஜபம் செய்வது போன்று ஒரு தெய்வத்தின் வழிபாடுடன் தொடர்புடைய எந்த செயல் செய்யும்போதும், அந்த தெய்வத்தின் குணங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  அதன் மூலம் தெய்வத்திடம் சரணாகதி உணர்வு அதிகரித்து அவரது ஆன்மீக மற்றும் தார்மீக  காரியங்கள் அதிக பக்திபூர்வமாகவும் தரமானதாகவும் மாறுவதற்கு உதவும். தெய்வத்தை வழிபடுபவர் தெய்வத்தின் குணங்களை நினைக்கும் போது, அந்த தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். மேலும், அந்த தெய்வத்துடன் இரண்டற கலக்க தெய்வீக குணங்களுக்கு ஏற்ப காரியங்களை செய்ய வேண்டும். இதன் மூலமாக வழிபடுபவரின் ஆழ்மனதில் தெய்வீக  குணங்களின் ஸன்ஸ்காரங்கள் உறுதிப்பட இது உதவும். இது தொடர்பான ஒரு உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராமரை வழிபடும் போது, சிறந்த மகன், சிறந்த சகோதரர், சிறந்த சிஷ்யர், சிறந்த அரசன், ஏகபத்தினி விரதர், சிறந்த நண்பர், தயாளகுணம் கொண்டவர், மரியாதா புருஷோத்தமன், தர்மத்திற்கு கட்டுபட்டு வாழ்பவர், தன் மக்களை சிறப்பாக பராமரிப்பவர், போர் உத்திகளில் வல்லுனர், ஒரே அம்பில் எதிரிகளை அழிக்கக்கூடிய திறன் உடையவர், மற்றும் சிறந்த எதிரி (ஏனெனில், தன்னுடைய சொந்த சகோதரன் போல்  இராவணன் இறந்த பின் அவன் மீது அன்பு செலுத்தினார்) போன்ற அவரின் தெய்வீக குணங்களை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ரீராமரின் குணங்களை நினைவில் கொள்ளும் போது, அவரின் தீவிர பக்தன் ஆக வேண்டும் (அதாவது, அவருடன் இரண்டறக் கலக்க வேண்டும்) என்றால் தன்னுடைய நடத்தை ஸ்ரீராமருடையது போல் ஆதர்சமாக மாற வேண்டும் என்பதை உணர வேண்டும். அதன் மூலம் பக்தனின் சித்தத்தில் ஆதர்ச தெய்வீக குணங்களின் ஸன்ஸ்காரம் உறுதியாக பதிய உதவி கிடைக்கிறது.

ஆன்மீக கோட்பாடுகள் மற்றும் மஹான்களின் வழிகாட்டுதல்படி நடக்க முயற்சிக்க வேண்டும். 

நிலை 3.    குணங்களை
வளர்த்துக் கொள்ள தடைகளாக இருக்கும்,
அன்றாடம் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து சரி செய்தல்

செயல்முறைக்காக நாம் தேர்ந்தெடுத்த குணத்திற்கு ஏற்ப தினசரி வாழ்க்கையில் செய்யும் காரியங்களில் தான் செய்யும் தவறுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். தவறுகள் பெரும்பாலும் இரண்டு வகைப்படும். முதல் வகை செயலின் விளைவாக ஏற்படும் தவறு; உதாரணமாக, சோம்பேறிதனம், அசுத்தமாக இருத்தல் போன்ற ஆளுமை குறைகளால் நடக்கும் தவறான செயல்கள். இரண்டாவது வகை மனதளவில் செய்யப்படும் தவறுகள்; உதாரணமாக கோபம், பொறாமை போன்ற ஆளுமை குறைகளால் ஏற்படும் தவறான எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் எதிர்வினைகள்.

 செயல் நிலையில் தவறுகளை திருத்துதல்

முதல் வகை செயல் நிலையில் தவறுகளை திருத்த, சூழ்நிலைக்கு ஏற்ப சரியான மற்றும் ஆதர்ச செயல்களை செய்ய சிந்திக்கவும். இந்த சரியான மற்றும் ஆதர்ச செயல்களை தொடர்ந்து மற்றும் சீராக செய்யவும். குணங்களுக்கு தடையாக இருக்கும் செயல்களை தவிர்த்தும் அதற்கு ஏற்புடைய செயல்களை அடிக்கடி செய்தும் வந்தால், குணங்களை வளர்க்கும் செயல்முறை வேகமாகவும் திறம்படவும் நடைபெறும். இதை நன்றாக புரிந்து கொள்ள, குணங்களை வளர்த்துக் கொள்ள வழிக்காட்டும் கேள்வித்தாள், என்ற குறிப்பை படியுங்கள்.

குணங்களை வளர்த்துக் கொள்ள வழிக்காட்டும்  கேள்வித்தாள் : பல்வேறு செயல்களில் நடக்கும் தவறுகளைத் தவிர்த்து குணங்களை வளர்த்துக் கொள்வதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள குண அடிப்படையிலான கேள்வித்தாள் உதவுகிறது. முயற்சியின் திசையைத் தீர்மானிக்க இது உதவியாக இருக்கும். ஒருவரிடமுள்ள குண-குறைகள், அவரின் புத்தி மற்றும் ஆன்மீக நிலை, குணங்களை தேர்வு  செய்யும் அளவுகோல் ஆகியவற்றைப் பொருத்து கேள்விகளுக்கான பதில்கள் மாறுபடும். உதாரணமாக, சிக்கனம் என்ற குணத்தை வளர்க்க  ஒருவன் தேவையற்ற செலவுகளை குறைப்பான், மற்றொருவன் குறைந்த விலையில் பொருளை வாங்க பல விற்பனையாளர்களிடம் விசாரித்து சரியான விலையை தெரிந்து கொள்வான்; ஒருவன் நேரத்தை வீணாக்காமல் இருக்க ஒன்று அல்லது பல செயல்களை குறைந்த நேரத்தில் செய்ய முற்படுவான், மற்றொருவன் சில செயல்களை செய்யும்போது பிறருடைய நேரத்தையும் சேமிக்க முயல்வான். பின்வரும் கேள்வித்தாளில், ஒவ்வொரு கேள்விக்கும் சிறந்த பதிலை கண்டுபிடித்து, யோசித்து செய்யும் செயலை நீங்களே முடிவு செய்யுங்கள்.

குணம் : 1. சிக்கனம்

செயல் நிலையில் முயற்சிகள்

     அ.  தினசரி நடவடிக்கைகள் சம்பந்தமான கேள்விகள்

  •                 காலையில் பல் தேய்க்கும் போது, நான் தேவையான அளவு மட்டுமே பற்பசையை பற்குச்சியில் இடுகிறேனா ?
  •                 பல் தேய்க்கும்போது குழாயை மூடுகிறேனா ?
  •                 குளியல் அறையில் இருந்து வெளியேறும்போது விளக்கை அணைக்கிறேனா ?
  •                 குளிக்கும்போதும், துணி துவைக்கும்போதும் மற்றும் பாத்திரங்களைத் துலக்கும்போதும் சோப்பு/துப்புறவு செய்யும் பொருட்கள் வீணாகாமல் இருக்க ஏதாவது முயற்சிகள் மேற்கொள்கிறேனா ?
  •                 தேவையான அளவு டீ அல்லது சிற்றுண்டியை எடுத்துக்கொள்கிறேனா அல்லது ஒரு வாய் குறைவாக எடுத்துக் கொள்கிறேனா ?
  •                 ஸ்கூட்டர் அல்லது காரை சரியான நேரத்தில் எடுக்கிறேனா ?
  •                 ஒரு பக்கம் உபயோகப்படுத்திய தாளின் காலியான மறுபக்கத்தை பயன்படுத்துகிறேனா ?
  •                 தொலைபேசியில் குறைவான வார்த்தைகளைப் பேசுகிறேனா ?
  •                 பயணம் செய்யும் போது மலிவான போக்குவரத்தை பயன்படுத்துகிறேனா ?
  •                 நான் வாங்க விரும்பும் பொருளின் சந்தை விலையை நான் அறிவேனா ?
  •                 ஒரு பொருளை வாங்கும் போது, அதன் விலை மற்றும் தரத்தின் சமநிலையை பார்க்கிறேனா ?
  •                 தேவையில்லாமல் உணவகத்தில் சாப்பிடும் பழக்கும் எனக்கு உண்டா ?

  ஆ. குடும்பத் தலைவிகளுக்கான கேள்விகள்

  •                 ஒரு எண்ணெய் பாக்கெட்டை திறந்து பாத்திரத்தில் ஊற்றியபின் , அந்த பாக்கெட்டை முழுமையாக கத்தரித்து அதில் ஒட்டியிருக்கும் எண்ணெயை சப்பாத்தி செய்ய உபயோகிக்கிறேனா ?
  •                 மளிகை சாமான் பைகள், கயிறுகள், காகிதங்கள் மற்றும் காலி பால் பைகளை பின்னர் பயன்படுத்த சீராக அடுக்கி வைக்கிறேனா ?
  •                 காளிஃபளவர், நூல்கோல் போன்ற காய்கறிகளின் பிஞ்சு இலைகளை சமைக்க பயன்படுத்துகிறேனா ?
  •                 சமைக்க ஆரம்பிக்கும் முன் அன்றைய சமையலுக்கு தேவையான உப்பு, புளி, வெல்லம், எண்ணெய் போன்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்த பின் சமையலை ஆரம்பிக்கிறேனா ?

  இ.  ஆன்மீக நிலை கேள்விகள்

  •                 குளிக்கும் போது நாமஜபம் அல்லது ராமரக்ஷா  ஸ்தோத்திரம் அல்லது வேறு ஏதாவது ஸ்தோத்திரம் சொல்கிறேனா ? (இது உடலில் சைதன்யத்தை சேர்ப்பதோடு தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு பெற உடலை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்துகிறது)
  •          .      பூஜை ஆரம்பிக்கும் முன் பூஜை தட்டில் தேவையான பொருட்கள் அனைத்தும் உள்ளதா என்று கவனிக்கிறேனா ?
  •                 நாமஜபம் செய்யும்போது உடலின் பல்வேறு பகுதிகளில் நியாஸ் மற்றும் முத்ரா மூலம் எனக்கு நானே ஆன்மீக உபாயம் செய்கிறேனா ?
  •                 சக ஸாதகர்களுடன் தேவையானவற்றை மட்டுமே பேசுகிறேனா?

குணம் : 2. சுய-ஒழுக்கம்

      செயல் நிலையில் முயற்சிகள்

  •         விடியற்காலை எழுந்து கொள்கிறேனா ?
  •         எழுந்தவுடன் படுக்கையை சரிசெய்து போர்வையை மடித்து வைக்கிறேனா ?
  •         வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், மற்ற வேலைகளை துவங்கும் முன் கை கால்களை கழுவுகிறேனா ?
  •         உபயோகித்த பின் பொருட்களை அதற்குரிய இடத்தில் வைக்கிறேனா    ?
  •         உடற்பயிற்சி, குளிப்பது, தெய்வ பூஜை செய்வது, துணிகளை துவைப்பது, துணிகளை இஸ்திரி செய்வது போன்ற வேலைளை விடாமல் செய்கிறேனா ?
  •         காலணிகளை கழட்டிய பின் அதற்குரிய இடத்தில் சீராக வைக்கிறேனா ?

குணம் : 3. உண்மையே பேசுதல்

செயல்பாட்டு நிலையில் செய்யப்படும் முயற்சிகளில் தினசரி உண்மையே பேசி பொய் பேசினால் அதற்குரிய பிராயச்சித்தம் எடுத்துக் கொண்டு மற்றும் பொய் சொன்னதற்கு காரணமான தவறான ஸன்ஸ்காரத்தை களைந்து  உண்மை பேசுதல் என்ற ஸன்ஸ்காரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

 தவறான செயல்களை திருத்த மனதளவில் மேற்கொள்ள  வேண்டிய முயற்சிகள்

சிக்கனம் என்ற குணத்தை வளர்க்க தடையாக இருக்கும் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தால் அதன் மூல காரணத்தை கண்டுபிடியுங்கள். மூல காரணத்திற்கு தொடர்புடைய ஆளுமை குறைகளைக் களைய ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறைப்படி சுய ஆலோசனை கொடுங்கள்.

உதாரணம் :       சிக்கனத்தை வளர்க்க முயற்சிக்கும் ஒருவன் ஒரு வாளியில் தண்ணீர் நிரப்ப குழாயை திறக்கிறான் என்று எடுத்துக் கொள்வோம். பொறுமையின்மை காரணமாக, வாளியில் நீர் நிரம்பும் வரை அவன் ஏதாவது வேறு காரியத்தை செய்ய முற்படுகிறான்,  அல்லது குழாயை மூட மறக்கிறான், இதன் விளைவாக தண்ணீர் வீணாகிறது. மேலே குறிப்பிட்டுள்ள சம்பவத்தில் சிக்கனம் இல்லாமல் இருப்பதற்கு மூல காரணம் மறதி அல்லது பொறுமையின்மை. எனவே, அவன் இந்த ஆளுமை குறைகளை நீக்க சுய ஆலோசனை வழங்க வேண்டும்.

எண்ணங்கள் நிலையில் தவறுகளை திருத்துதல் : கீழே குறிப்பிட்டுள்ளபடி எண்ணங்கள் நிலையில் தவறுகளை திருத்த முயற்சிக்கவும்.

மனதளவில் முயற்சிகள்

தவறான எண்ணங்கள் மற்றும் எதிர்வினைகளை நீக்க சுய ஆலோசனை வழங்குதல் : கோபம், பொறாமை போன்ற ஆளுமை குறைகளால் ஏற்படும் தவறான எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் எதிர்வினைகளை நீக்கவும், சரியான கண்ணோட்டம் மற்றும் ஆதர்ச எண்ணங்களை வளர்க்கவும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையின் சரியான எதிர்வினை உத்திப்படி சுய ஆலோசனை எடுக்கவும்.

குணம் : 4. மனதளவில் சிக்கனம்

தேவையில்லாமல் பேசும் அல்லது எழுதும் பழக்கம் இருந்தால் அதன் ஆரம்பம் எண்ணங்களில் உள்ளது. மனதில் தேவையற்ற எண்ணங்கள் இருப்பதால், அவை பேச்சு அல்லது எழுத்து மூலம் வெளிப்படுகின்றன. இதில், தேவையற்ற எண்ணங்களுக்கு காரணமாக உள்ள அடிப்படை ஆளுமை குறைகளை சுய ஆலோசனை மூலம் நீக்க வேண்டும். உபயோகமற்ற, நம்பிக்கையற்ற எண்ணங்கள் அல்லது அதிக ஆய்வில் நேரம் வீணாக்கப்பட்டால், நம்பிக்கையூட்டும் எண்ணங்களை வளர்க்க மற்றும் அதிக ஆய்வில் நேரத்தை வீணாக்குவதை நிறுத்த சுய ஆலோசனை வழங்கவும்.

குணம் : 5. மனதளவில் உண்மையே பேசுதல்

இந்த குணத்திற்கு பொய் பேசுதல் என்ற ஆளுமை குறை தீங்கு விளைவிக்கும். யாரிடமாவது இந்த ஆளுமை குறை இருந்தால் அவரிடம், பிறரை கேலி செய்வது, உண்மையை மறைப்பது, தவறை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது, மனதில் பயம் போன்ற பல குறைகளில் ஒன்று அல்லது மிகுதியான குறைகள் காரணமாக இருக்கலாம். தனக்கு பொருந்தும் காரணத்தை கண்டுபிடித்து அதனை நீக்க சுய ஆலோசனை வழங்கவும்.

 அ. நேர்மறையான எண்ணங்கள் : தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் எதிர்மறையான எண்ணங்களை குறைக்கவும் எப்பொழுதும் நேர்மறையாக எண்ணுவது உதவும்.

ஆ.  புத்தி அளவில் முயற்சிகள் : குறிப்பிட்ட குணத்திற்கு ஏற்ப சரியான செயலை செய்வதன் மஹத்துவத்தை மறுபடியும் மறுபடியும் மனதில் பதிய வைக்க வேண்டும்.

நிலை 4.    ஆழ்மனதில் குணத்தின்
ஸன்ஸ்காரம் ஏற்பட சுய ஆலோசனை வழங்குதல்

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குணத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு சம்பவத்திலும் செயல் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மனதளவில் தடைகள் இருக்க வாய்ப்புண்டு. இத்தகைய சூழ்நிலையில், இந்த தடைகளை கடந்து சரியான செயல்களை செய்து அந்த குணத்தின் ஸன்ஸ்காரத்தை ஆழ்மனதில் உண்டாக்க, சம்பவம் சார்ந்த சுய ஆலோசனை வழங்க வேண்டும். தவறான செயலை உணர்ந்து அதனை கட்டுப்படுத்துதல் என்ற  உத்தியை உபயோகித்து, சுய ஆலோசனை வழங்க வேண்டும். அதனுடன் தொடர்புடைய குணம் மற்றும் சரியான செயலை சுய ஆலோசனையில் குறிப்பிடவும்.

ஆளுமை குறைகளை களையும் செயல்முறை பயிற்சியில் சிறிது மாற்றம் செய்து முன்னேற தேவையான சுய ஆலோசனையுடன் கூட ஆளுமை குறைகளை நீக்க இரண்டு சுய ஆலோசனைகளையும், குணத்தை வளர்க்க ஒன்றும் மற்றும் நாமஜபத்திற்காக ஒன்றும் அல்லது ஆளுமை குறைகளை நீக்க மூன்றும் குணங்களை வளர்க்க ஒன்றும் என திட்டமிட்டுக் கொள்ளலாம். சுய ஆலோசனைகளை வடிவமைக்க பல்வேறு முறைகளின் விவரங்கள், அவற்றை வடிவமைக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் மற்றும் சுய ஆலோசனைகள் அமர்வுகள் போன்ற அனைத்தும் விவரமாக ‘ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறை : பாகம் 2’, என்ற புனித நூல் தொடரில்  விவாதிக்கப்பட்டுள்ளது. குணங்களை வளர்க்க உதவும் சுய ஆலோசனையின் உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குணம் : அன்பு

சம்பவம்     :       திரு ஜகன் அவர்கள் அலுவலகத்தில் இருந்து திரும்பும் நேரமும் அவருடைய காலனியில் வாழும் பெரியவர் திரு கேசவரின் பேத்தி பள்ளியில் இருந்து திரும்பும் நேரமும் ஒன்றே. இதன் விளைவாக, இருவரும் எப்பொழுதும் பேருந்து நிலையத்தில் சந்திப்பர். சில சமயங்களில், பேருந்து  தாமதமாகிவிட்டால், திரு ஜகன் வீட்டிற்கு செல்ல ஒரு ரிக்ஷாவை எடுப்பார். குணங்களை வளர்க்கும் செயல்முறையில் அன்பு என்ற குணத்தை திரு ஜகன் அவர்கள் தேர்ந்தெடுத்ததும், ரிக்ஷாவில் திரு கேசவரையும் அழைத்து செல்ல முடிவு செய்தார். கீழே கொடுக்கப்பட்டது போல் சுய ஆலோசனை வடிவமைத்தார்.

செயல்முறை       :       தவறான செயலை உணர்ந்து அதனை கட்டுப்படுத்துதல்

சுய ஆலோசனை :       மாலை வேளையில் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்தில் நிற்கும் போது, பேருந்து வர தாமதமானால் நான் ரிக்ஷாவை எடுக்க முடிவு செய்தால், என்னுள் அன்பு என்ற குணத்தை வளர்க்க, என் காலனியில் வாழும் திரு கேசவரையும் அவருடைய பேத்தியையும் என்னுடன் அழைத்து செல்வேன்.

நிலை 5.   செயல்முறையை மதிப்பாய்வு செய்தல்

ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறை : பாகம் 2 என்ற புனித நூலில் அத்தியாயம்  5-ல் கொடுக்கப்பட்டுள்ள குணங்களின் ஒரு பட்டியலில் இருந்து இரண்டு அல்லது மூன்று குணங்களை தேர்ந்தெடுங்கள். அதன் பிறகு,  உடல், மனம், புத்தி, குடும்பம், நிதி, அலுவலகம், சமூகம், ஆன்மீகம் முதலான நிலைகளில் குணங்களுடன் தொடர்புடைய செயல்களை அடையாளம் கண்டு, அதன்படி முயற்சிகள் மேற்கொள்ள ஒரு கால அளவை நிர்ணயிக்கவும்.

வழிகாட்டும் கேள்வித்தாளின்படி எத்தனை செயல்கள் சாத்தியமானது எத்தனை சாத்தியமாகவில்லை என்பதை குறித்துக்கொண்டு எட்டு நாட்களுக்கு உங்களை கண்காணியுங்கள். எட்டு நாட்களுக்கு பிறகு ஒரு மதிப்பாய்வு செய்யுங்கள். மதிப்பாய்வில் கீழே சொல்லப்பட்ட காரணிகளை கருத்தில் கொள்ளுங்கள்.

1.     சரியான செயல்கள் அதிகரித்தல்

2.    சரியான எண்ணங்கள் மற்றும் எதிர்வினைகள் அதிகரித்தல்

3.     செயல்முறையில் எதிர்கொள்ளும் தடங்கல்கள்

இந்த மதிப்பாய்வு முடிந்தபின், இந்த செயல்முறையில் உள்ள தீர்வுகளை  கண்டுபிடியுங்கள், பிறகு மேற்கொண்டு செய்ய வேண்டிய தொடர் நடவடிக்கை பற்றி முடிவு செய்யுங்கள். ஒரு குணத்துடன் தொடர்புடைய செயல் மத்யமத்திலிருந்து அதிக அளவு விகிதத்தில் இருந்தால் பட்டியலில் இருந்து வேறு ஒரு குணத்தை தேர்வு செய்யலாம். வேறு குணத்தை தேர்வு செய்யும்போது, செயல்முறைக்கு தேவையான ஒரு குறிப்பிட்ட குணத்தை தேர்வு செய்யும் முறைப்படி தேர்வு செய்வது நல்லது.

(தகவல் : ஸனாதனின் நூல் ‘ஆளுமை குறைகளைக் களைவதன் மகத்துவம் மற்றும் குணங்களை வளர்ப்பதன் செயல்முறை’)

 

Leave a Comment