மரங்களுக்கு உணர்வு உண்டு, மனிதர்கள் இழைக்கும் தவறுகளை சில சமயங்களில் மன்னிப்பதும் உண்டு!

இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ், மரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை வெளிக்கொணர்ந்துள்ளார். பாரதீய கலாச்சாரத்தில் மரங்கள் தெய்வங்களாக வழிபடப்படுகின்றன. மரங்களுக்கு உணர்வு உண்டு, மனிதர்கள் இழைக்கும் தவறுகளை சில சமயங்களில் மன்னிப்பதும் உண்டு. இது பல பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு அனுபவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘நாசிக்கில் உள்ள எங்கள் தோட்டத்தில் பல வகை செம்பருத்தி பூக்கள் மலர்வதுண்டு. எங்கள் வீட்டு வாயிலுக்கு எதிரே ஒரு அழகான செம்பருத்தி செடி உண்டு. மஞ்சள் இதழ்களும் ஆழ் ரோஸ் நிற மையமும் கொண்ட செம்பருத்தி பூக்கள் அந்த செடியை நிறைப்பதுண்டு. ஒவ்வொரு நாளும் அறுபதுக்கும் மேற்பட்ட பூக்கள் அதில் மலர்வதுண்டு. அதுவே எனக்கு மிகவும் பிடித்தமான செடி. ஆனால் அதன் கிளைகள் பக்கத்து வீட்டு சோனார் மாமாவின் தோட்டத்தில் படர்ந்தன. மறுநாள் பூக்கள் வாடி தரையில் விழுந்தன. பல வண்டுகள் அதை மொய்த்து வீட்டினுள்ளும் நுழைந்தன. வாடிய பூக்கள் ஒட்டிக் கொள்வதால் அதன் மீது கால் வைப்போர் வழுக்கி விழும் அபாயமும் உண்டு. இக்காரணங்களால் சோனார் மாமா என்னிடம் கிளைகளை கழிக்கும்படி கூறிக்கொண்டே இருந்தார். மொட்டுக்கள் மலரும்வரை இன்னும் சிறிது காலம் காத்திருக்கும்படி நானும் அவரிடம் வேண்டிக் கொண்டு இருந்தேன். பூக்கள் குறைந்தவுடன் உடனே கிளைகளை கழித்து விடுகிறேன் அன்று அவரிடம் உறுதி கூறினேன்.

கோவத்தில் செம்பருத்தி செடியின் கிளைகளை
வெட்டி எறிந்து பின் இத்தகைய கீழ்த்தர செயலுக்காக வருந்துதல்

பல நாட்கள் தொடர்ந்து கூறியும் நான் கிளைகளை வெட்டாததால் கோவமடைந்த சோனார் மாமா உடனே கிளைகளை வெட்டுமாறு கூறினார். அதன் விளைவாக நானும் என் பொறுமையை இழந்து கண்மூடித்தனமாக அரிவாள் மற்றும் கத்திரி கொண்டு கிளைகளை வெட்டி எறிந்தேன். அதனால் 10 முதல் 12 அடி உயரம் இருந்த செடி 2.5 – 3 அடி உயரம் ஆனது. அடங்காத கோவத்தால் மனிதர்கள் எவ்வாறு அறிவிழந்து செயல்படுகிறார்கள் என்பதற்கு நானே உதாரணமாகிப் போனேன். பின்பு நான் வருத்தப்பட்டாலும் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. நடந்தது நடந்ததே.

மழைக்காலத்தில் செடி மறுபடி துளிர்த்தாலும் ஒரு பூ கூட மலரவில்லை

மழைக்காலத்தில் செடி மறுபடியும் துளிர்த்தது. ஆச்சரியம் என்னவென்றால் ஒரு கிளை கூட பக்கத்து வீட்டில் படரவில்லை. இலைகள் பச்சைப் பசேலென்று இருந்தாலும் ஒரு பூ கூட மலரவில்லை. அருகிலுள்ள அனைத்து மரங்களும் பூத்துக் குலுங்கின. பூச்சி மருந்து அடித்து உரங்கள் போட்டும் எந்தப் பயனும் இல்லை. ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. நான் நிலைகொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தேன். இதை சோனார் மாமாவிடம் கூறியபோது அவரும் வருத்தப்பட்டார்.

மன்னிப்பு கோரிய சிறிது நாட்களில்
செம்பருத்தி செடியில் மொட்டுக்கள் மலர ஆரம்பித்தன

‘கன்யாகுமரி விவேகானந்த கேந்திராவிலுள்ள தன்னார்வலரான சரஸ்வதி அக்காவிடம் ஒரு நாள் தொலைபேசியில் பேசினேன். அவர்களுக்கு செடிகள் பற்றிய ஆழ்ந்த ஞானம் உண்டு. அவர்களிடம் செம்பருத்தி செடி பற்றிய என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். செடியிடம் மன்னிப்புக் கோரி, அதைத் தடவிக் கொடுத்து அதனிடம் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் பேசும்படி எனக்கு அறிவுரை வழங்கினார். நான் அந்த அறிவுரையை பின்பற்ற ஆரம்பித்தேன். முதலில் சிறிது செயற்கையாக இருந்தாலும் நாட்கள் ஆக ஆக செடியிடம் பேச வேண்டும் அதை அன்புடன் தடவிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டது. அது எப்போது பூக்க ஆரம்பிக்கும் என்ற நினைப்பே மறைந்து போய் அதிக மகத்துவம் வாய்ந்த ஒரு அற்புத நேசம் எங்களுக்குள் ஏற்பட்டது. பன்னிரண்டு நாட்கள் கடந்தன. ஒரு நாள் இலைக்கு பின் மறைந்து ஒரு மொட்டு இருப்பதைக் கண்டேன். அன்றைய என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நான்கு நாட்களுக்குள் செடி முழுவதும் மொட்டுக்கள் முளைத்து மலர ஆரம்பித்தன. அப்போதுதான் செடி என்னை மன்னித்து விட்டது என்பதை என்னால் உணர முடிந்தது. அதன் பிறகு செடியுடன் உரையாடும்போது இனி ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன் என உறுதி அளித்தேன்.

–        பாரதி தாகூர், மத்தியபிரதேசம்.

தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்

Leave a Comment